அண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர்

அண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர்
Thiruvannamalai-Arunachaleswarar-History


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.

தமிழ்நாட்டில் எத்தனையோ மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த மலைகளில் மிகுந்த தனித்துவமும், சிறப்பிடமும் கொண்டது திருவண்ணாமலை. சிவபெருமானே, மலையாக வீற்றிருப்பதால், சித்தப் புருஷர்களை அதிக அளவில் ஈர்க்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்கிறது. இதனால் தான் அண்ணாமலையை, ‘‘ஞானத் தபோவனரை வா என்று அழைக்கும் மலை’’ என்று குரு நமச்சிவாயர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தர்களின் தவ பூமியாகத் திகழும் இந்த மலையில் கண்ணுக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர். அவர்கள் ஈசனிடம் அருள்பெற்று, பக்தர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சில சமயங்களில் அந்த சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதும் உண்டு. திருவண்ணாமலை மலை மட்டுமின்றி ஆலயமும் சித்தர்கள் ஆசி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே திருமஞ்சன கோபுரம் அருகே பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தர் ஒளிதேகம் பெற்ற இடம் உள்ளது.

அதுபோல மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முக்தி மண்டபத்தில் அருணாசலேஸ்வரர், யோகியாக சூட்சும வடிவில் இன்றைக்கும் சித்தர்களுக்கு தரிசனம் தருவதாக சொல்கிறார்கள். அந்த முக்தி மண்டபம் அருகே அமர்ந்து தியானம் செய்தால் சித்தர்களின் அருளைப் பெற முடியும்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். மற்றவர்கள் அரூப நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ‘கிரிவலம் செல்ல வேண்டும்’’ என்பதையே பிரதானமாக வலியுறுத்தினார்கள். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.

கர்நாடகாவில் மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் குகை நமசிவாயர் பிறந்தார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘திருவண்ணாமலைக்கு வா’’ என்று அழைத்தார். அதை ஏற்று நமசிவாயர் புறப்பட்டு வந்தார்.

தன் சீடர்கள் 300 பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசி வழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசிய போது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் நினைத்தனர்.

ஆனால், நமசிவாயர், தன் அருட் சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். பின், அவர்கள் பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்து வரும்படி குகை நமசிவாயர் தமது சீடர்களை அனுப்பினார். அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோவில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். அதற்கு கோவில் நிர்வாகிகள் உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர் மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.

அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்று சமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது, நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும்! என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம், சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு நன்கு காய்ச்சிய இரும்பை பிடித்து காட்டுங்கள்! என்றான்.

அதற்கு நமசிவாயர், இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே என்று விரூபாட்சித் தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய விரூப்பாட்சிய தேவர் பழுக்கக் இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.

சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார்.
அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுல்லைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன.

குகை நமசிவாயர் தினமும் குகையை விட்டு அதிகாலையில் வெளியே வருவார். மலையைச் சுற்றி கண்ணோட்டம் விடுவார். ‘‘அருணாசலா நீ சுகம் தானே’’ என உரக்கக் கேட்பார். “சுகம், சுகம்’’ என மலை எதிரொலிக்கும். ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒருநாளும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குகை நமசிவாயர் ஒரு நாள் இரக்கமற்ற அருணாசலா நீ மட்டும் சுகமாயிரு என்று குமுறலுடன் கூறினார்.

அண்ணாமலையார் மீது குகை நமசிவாயர் பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் அவருக்கு அண்ணாமலையார் வழங்கினார். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.


அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகளாக இருந்தன. இவருடைய சீடர்களுள் விரூபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.

ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள்.

இரக்கப்பட்ட குகை நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று ஆறுதல் கூறி வழி அனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்து வந்தான். கோவிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான்.

இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீரோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின் நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் குகை நமசிவாயர் செய்தார்.

ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்துள்ள குகை நமசிவாயர் நடத்திய சித்தாடல்கள் ஏராளம். ஒருதடவை இறந்து போன ஆட்டுக்கு உயிர் கொடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார். உடனே சிலர் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்து, பாடையில் கட்டி குகை நமசிவாயரிடம் தூக்கிச் சென்றனர். ‘‘சாமீ இவன் செத்துப் போயிட்டான். ஆட்டுக்கு உயிர் கொடுத்தது போல இவனுக்கும் உயிர் கொடுங்கள்’’ என்று கிண்டலாகக் கேட்டனர்.

உடனே குகை நமசிவாயர், ‘‘ஆமா... .... இவன் செத்து போயிட்டான். கொண்டு போய் புதைத்து விடுங்கள்’’ என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் சிரித்தனர்.
‘‘டேய் எழுந்திருடா... சாமீ பொய் சொல்றாருடா...’’ என்றனர். ஆனால் பாடையில் படுத்து வந்தவன் எழுந்திருக்கவில்லை. உண்மையிலேயே செத்து போய் விட்டான். இந்த சம்பவத்துக்குப் பிறகு திருவண்ணாமலையில் குகை நமசிவாயரை, அனைவரும் பயபக்தியுடன் நடத்தினார்கள்.

குகை நமசிவாயர் மூலம் அண்ணாமலையாரின் புகழ் நாட்டின் நாலாபுறமும் பரவியது. இதனால் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் இன்றும் உற்சவ காலங்களில் அண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவரது தேருக்கு பின்னே குகை நமசிவாயரும், விரூபாட்சித் தேவரும் தனி தனி பல்லக்குகளில் வலம் வருகிறார்கள். ஒருதடவை அண்ணாமலையார், ‘‘குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பி திரும்பிப் பார்த்து கழுத்து வலிக்கிறது.

எனவே குகை நமசிவாயர் முதலில் செல்லட்டும்’’ என்றாராம். அன்று முதல் உற்சவ வீதி உலாக்களில் குகை நமசிவாயர் தேர் முதலில் செல்வது குறிப்பிடத்தக்கது. குகை நமசிவாயர் மீது அண்ணாமலையார் காட்டிய அன்புக்கு இவையெல்லாம் உதாரணமாக உள்ளன. ஒருதடவை குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆக நினைத்த போது மேலும் 100 ஆண்டுகள் வா-ழ அண்ணாமலையார் அவருக்கு ஆயுளை நீட்டித்தாராம்.

ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று குகை நமசிவாயர் தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.

அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா... எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு குகை நமசிவாயருக்கு முதல் வாரிசு பிறந்தது.

ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர் எழுதிய பாடல்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்று மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமச்சிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும்.

மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்கனத்தில் குருபூஜை நடந்து வருகிறது. 500 ஆண்டுகளை கடந்து குகை நமசிவாயருக்கு குருபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் குகை நமச்சிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். குகை நமசிவாயரின் 18-வது வாரிசுதாரர் தற்போது இந்த ஜீவசமாதியை பராமரித்து வருகிறார்.