Showing posts with label அற்புத சூரியனே போற்றி. Show all posts
Showing posts with label அற்புத சூரியனே போற்றி. Show all posts

அற்புத சூரியனே போற்றி

கடந்து போகும் எல்லாம் மறந்தும் போகட்டும்!

ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

‘இதுவும் கடந்து போகும்’ என்று பொறுமை காப்பது ஒருவருடைய பெருந்தன்மை. குறிப்பிட்ட சம்பவத்தில் தனக்குச் சிறுமை ஏற்படுத்தியவரை, தனக்கு பொருள் நஷ்டம் ஏற்படுத்தியவரை, தன்னைத் தாக்கியவரை, நம்மைப் பிறர் ஏளனமாக நினைக்கும்படிச் செய்தவரை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், ‘சரி விடு. போகட்டும்,’ என்று அமைதியாகிவிடுவது அந்தப் பெருந்தன்மைக்கான கிரீடம்.

ஆனால், அந்தப் பெருந்தன்மையும் எங்கே மலிவாகிறது, தெரியுமா? ‘இதுவும் கடந்து போகும்’ என்று ஒதுக்கப்பட்ட சம்பவங்கள் அல்லது பேச்சு அல்லது நடவடிக்கை எதுவும் மறந்து போகாதிருக்கும்போதுதான்! அதாவது, ‘கடந்து போகும்’ என்று கருதப்பட்டதெல்லாம் ‘மறந்து போகாத’போது பெருந்தன்மை என்று அதை எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?

அப்படி மறந்து போகாதவை மனதைக் குடைந்துகொண்டே இருக்காதா? மேம்போக்காக ‘சரி, போகட்டும், விடு’ என்று சொல்லப்பட்டவையெல்லாம் மனசுக்குள்ளேயே தங்கி சமயம் பார்த்துக் காத்திருக்காதா? குறிப்பிட்ட நேரத்தில் வெளிப்படாத எதிர்ப்பு உணர்ச்சி, பின்னால் வெளிப்படுமானால் அதன் தாக்கம், வீரியம் மிகுந்ததாக அல்லவா இருக்கும்!

அதாவது, நம்மைக் காயப்படுத்தியவரே மறந்திருக்கக்கூடிய அந்த சம்பவத்தை நாம் மீண்டும் நினைவூட்டி பொருத்தமே இல்லாத காலத்தில் எதிர்ப்பைக் காட்டினால் அதனால் உண்டாகும் பின்விளைவுகள் விபரீதமானதாக அல்லவோ இருக்கும்! பல பரம்பரைச் சண்டைகளுக்கு இதுதானே அடிப்படைக் காரணம்!

‘கடந்து போகும்’ என்ற மன்னிக்கத் துணியும் பெருந்தன்மைக்கு ‘மறந்தும் போகும்’ என்ற பக்குவம் கட்டாயம் வேண்டும். இந்தப் பக்குவத்தை இறைவழிபாடு நமக்கு அளிக்கும். அடிப்படையில் மன்னிக்கும் குணநலமே மிகச் சிறப்பானது; அதோடு மறக்கும் குணமும் சேர்ந்தால் இன்னும் சிறப்பு. தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவோம். நம் தேவைகளுக்கான விண்ணப்பங்களை இறைவன் முன் வைப்போம் - தப்பில்லை. ஆனால், கூடவே மறக்க வேண்டிய சம்பவங்களையும் நம் மனதிலிருந்து களைந்தெறிய இறைவனை வேண்டிக்கொள்வோம்.

சிலநாள் பயிற்சிக்குள்ளாகவே மறத்தல் நமக்குக் கைவந்துவிடும். சம்பந்தப்பட்டவர்களே வந்து நினைவூட்டினாலும், ‘அப்படியா? எனக்கு நினைவில்லையே!’ என்று சொல்லி அவரையும் அந்த சம்பவத்தை மறக்கச் சொல்லி மறைமுகமாக வற்புறுத்தும் ஆன்ம பலம் வந்துவிடும். மனசு லேசாகும், குப்பை நீங்கி சுத்தமான வீடுபோல.