Showing posts with label தொட்டுக் கொள்ளலாமா ஊறுகாயை?. Show all posts
Showing posts with label தொட்டுக் கொள்ளலாமா ஊறுகாயை?. Show all posts

தொட்டுக் கொள்ளலாமா ஊறுகாயை?

தொட்டுக் கொள்ளலாமா ஊறுகாயை?

தயிர் சாதம் ஊறுகாய் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊறுகாய் ஊட்டும் என்பார்கள்.

இவ்வளவு பிரசித்தி பெற்ற ஊறுகாயை உடலுக்குப் பிடிக்குமா என்றால் பொதுவான பதில் பிடிக்காது என்பதுதான். உப்பில் ஊறிய காய் தான் ஊறுகாய். ஊறுகாயில் ஊறு விளைவிப்பது எது என்றால்..

ஊறுகாய் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அளவுக்கு சற்று அதிகமாகவே உப்பை போடுகிறோம். அதே சமயம் தாளித்த ஊறுகாயிலும் தேவைக்கு அதிகமாக எண்ணெய் ஊற்றுகிறோம். இதனால் நிச்சயமாக ஊறுகாய் நமது உடலுக்கு ஊறு விளைவிப்பது உண்மைதான்.

ஆனால், அதற்காக நம்மால் ஊறுகாயை கைவிட முடியுமா என்றால் பலரது ஒருமித்த குரல் நிச்சயமாக முடியாது என்பதுவாகவே இருக்கும்.

சரி ஊறுகாயை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம் கூறும் ஒரே ஆலோசனை ஊறுகாய், மோர் மிளகாய் போன்றவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

அதே சமயம், ஊறுகாய் அல்லது மோர் மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உங்களது உடல் நலனுக்காக, மற்ற உணவுப் பொருட்களில் உப்பை குறைத்துக் கொள்ளலாம். இதனால், ஒரே நேரத்தில் உடலில் அதிகப்படியாக உப்பு சேர்வதை தடுக்க முடியும்.

அதிலும் சிலர் தினமும் ஊறுகாய் சாப்பிடுவார்கள். இவர்களுக்குத்தான் மேல் சொன்ன அனைத்து எச்சரிக்கைகளும் பொருந்தும். அவ்வாறு இல்லால், எப்போதாவது ஒரு முறை எடுத்துக் கொள்வதால் ஊறுகாய் நிச்சயமாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய பலவீன நோய் இருப்பவர்கள் ஊறுகாயையும், மோர் மிளகாயையும் சாப்பிடவே கூடாது. அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் உள்ளவர்களும் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வேண்டுமென்றால் குறைவான காரம், உப்பு சேர்த்து அவ்வப்போது வீட்டிலேயே தயாரிக்கும் ஊறுகாயை எடுத்துக் கொள்ளலாம்.