சிருங்கேரி - தெய்வீகத் திருத்தலம்

சிருங்கேரி - தெய்வீகத் திருத்தலம்
sringeri-Sharadamba.


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி.

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி. 1200 வருடங்களுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் பாரத திருநாட்டின் நான்கு பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பீடங்களுள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் முதன்மையானதாகும்.

ஸ்ரீசங்கரரையே முதல் குருவாக கொண்டு தொடங்கிய ஸ்ரீசாரதா பீடத்தின் குருபரம்பரை அவருக்குப் பிறகும் இணையற்ற ஜீவன்முக்தர்களால் அலங்கரிக்கப்பட்டு வாழையடி வாழையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.



தற்போது இந்த பீத்தின் 36-வது ஜகத்குரு சங்கராசார்யராக ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள். அளவிடமுடியா ஆன்மீக சாதனைகளைப் படைத்தவரும், கருணைக்கடலும் உலகம் போற்றும் பண்டிதருமான ஆசார்ய சுவாமிகளை நாடி அவரது ஆசிகளை பெற்றுச் செல்வதற்காகவும் மற்றும் சாரதா பீடத்து திவ்விய ஆலயங்களில் தெய்வ தரிசனம் செய்து அளவற்ற ஆனந்தத்தை அடைவதற்காகவும் நாடெங்கிலும் இருந்து நாள்தோறும் எண்ணற்ற ஆஸ்திக பெருமக்கள் சிருங்கேரிக்கு செல்கின்றனர்.

இத்தலத்தைக் கண்டதும் உள்ளத்தைப் பறிகொடுக்காதவர் எவருமிலர் என்றே கூறலாம். இயற்கை பேரெழிலும் தெய்வீகச் சூழலும் நிரம்பப்பெற்ற இத்தலம், தன்னிடத்தே இறையுணர்வுடன் வருவோருக்கு இக பர சுகங்களை மட்டுமல்லாது பிறவிப்பிணியை நீக்கிட உதவும் ஆத்ம ஞானத்தையும் தரவல்லது.

இத்தலம் ராமாயணக்காலத்திற்கும் முற்பட்டதாகும். அக்கால கட்டத்தில் விபாண்டகர் எனும் பெரும் தவ வலிமை பூண்ட முனிவர் இப்பிரதேசத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் கானகத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஓர் அழகிய ஆண் குழந்தை கேட்பாரின்றி கிடப்பதை கண்டார்.

அதன்மேல் பரிவு கொண்ட அவர் அக்குழந்தையை தன்னுடன் எடுத்து வந்து விட்டார். தெய்வீக ஒளியுடன் விளங்கிய அக்குழந்தையின் தலையில் ஒரு சிறிய கொம்பு போன்ற வளர்ச்சி இருப்பதை கண்ட விபாண்டகர் அக்குழந்தைக்கு ‘ரிஷ்ய சிருங்கர்’ எனப்பெயர் சூட்டி வளர்த்து வரலானார். விபாண்டகரின் நேரடி கண்காணிப்பில் வேத சாஸ்திர கல்வியைக் கற்று தவ வன்மையுடன் வளர்ந்து வந்த ரிஷ்ய சிருங்கர் பெண்களை கண்டதேயில்லை.

பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற இயற்கை உணவினை தவிர வேறு உணவுகள் எதையும் அறிந்தாருமில்லை. அவரது பிரம்மசரிய நெறி மிக மிக உயர்ந்து இணையற்று விளங்கியது. அக்காலக் கட்டத்திலேயே அப்பிரதேசத்திற்கு சற்றுத் தொலைவில் இருந்த நாட்டினை ரோமபாதர் எனும் அரசர் ஆண்டு வந்தார். தமது நாட்டில் நீண்ட காலமாகவே மழை பொழியாமல் எங்கும் பெருவறட்சி நிலவுவதை கண்டு மிகவும் கவலை கொண்ட அந்த அரசர் அதுபற்றி தமது மதியூக மந்திரிகளிடம் ஆலோசனை செய்தார்.

அவர்கள் அவருக்கு ரிஷ்ய சிருங்கரைப் பற்றி எடுத்துரைத்து, இணையற்ற பிரம்மசாரியான அவரது பாதம் அந்நாட்டில் படுமேயானால் உடனடியாக மழை பொழியும் எனக் கூறினர். ரிஷ்ய சிருங்கர் பெண்களை இதுவரை பார்த்திராததால், திறமை கொண்ட பெண்கள் சிலரை அனுப்பி வைத்து அவரது கவனத்தை ஈர்த்து விபாண்டகருக்கு தெரியாவண்ணம் அவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்றும் ரோமபாதருக்கு அம்மந்திரிகள் ஆலோசனை கூறினர்.

விபாண்டகரின் கோபத்தை கிளறி பெரும் சாபத்தைப் பெறக்கூடிய அபாயம் இருந்தபோதிலும், நாட்டின் நன்மையை முன்னிருத்தி ரோமபாதரும் அதற்குச் சம்மதித்தார். அரசரின் ஆணைப்படி, அழகும் திறமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பெண்கள் சிலர் விபாண்டகர் இல்லாத சமயம் அவரது ஆசிரமத்திற்கு சென்று ரிஷ்ய சிருங்கரைச் சந்தித்தனர். அவர்களை கண்ட அந்த தெய்வீக பிரம்மச்சாரி அவர்களை வேதத்தில் கூறப்படும் மேலுலகவாசிகள் என்றே எண்ணி விட்டார்.

அவர்களிடம் தனக்கு இனம் புரியாததொரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்த அவர் அவர்களது அழைப்பையேற்று, தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் எண்ணமுமின்றி அவர்களுடன் கிளம்பி விட்டார். அவர்களது நாட்டில் ரிஷ்ய சிருங்கரின் பாதம் பட்டதுதான் தாமதம், பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது.
மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அரசரும் தமது மகளையே ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்தும் வைத்து விட்டார்.

இதற்கிடையில் தமது புத்திரரை வஞ்சித்து தமக்குத் தெரியாமல் அவரை அழைத்துச் சென்று விட்ட அரசர் ரோமபாதரின் செயலை தமது ஞானக்கண்ணால் அறிந்து கொண்ட விபாண்டகர், பெரும் சினம் கொண்டவராக ரோமபாதரின் நாட்டை அடைந்தார். ஆயினும் அரசரின் பணிவார்ந்த சொற்களாலும் உபசரிப்பாலும் சினம் தணிந்த விபாண்டகர் நடந்த அனைத்தும் ஈசனின் திருவுளம் என்பதைப் புரிந்து கொண்டவராய் மணமக்களை நெஞ்சார வாழ்த்தி விட்டு கானகத்திற்கே திரும்பி விட்டார்.

கானகத்தில் இருக்கும் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து நீண்ட தவத்தில் ஈடுபட்ட விபாண்டகர் தமது உடலை நீத்து பெரும் ஒளி வடிவில் அக்குன்றிலிருக்கும் சிவலிங்கத்தினுள்ளே ஐக்கியமானார். (சிருங்கேரியில் இன்றும் இக்குன்று உள்ளது. அம்மஹாமுனிவர் ஐக்கியமான லிங்கம் உள்ள ஆலயமே ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம் என்ற பெயருடன் விளங்கி வருகிறது).

ரோமபாதரின் நாட்டில் இருந்த ரிஷ்ய சிருங்கரின் மகிமைகளை அறிந்த அண்டைநாட்டு அரசரான தசரத மகாராஜா அவரைத் தமது அயோத்தி நாட்டிற்கு வருகை புரிந்து தமக்கு சத்புத்திரர்கள் பிறக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தி அளித்து ஆசீர்வதிக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டார். அதற்கிணங்கி, ரிஷ்ய சிருங்களும் அப்படியே செய்து கொடுத்தார். அதன் விளைவாக ஸ்ரீராமபிரான் முதலான தெய்வீக புத்திரர்கள் தசரதருக்கு கிடைக்கப் பெற்றார்கள்.

சிறிது காலம் சென்றபின் ரிஷ்ய சிங்கருக்கு தனது அருந்தவப் பயனாலும் இறையுளத்தாலும் விரைவிலேயே இல்வாழ்க்கையில் ஈடுபாடு விலகியதால், அவர் தமது குடும்பத்தார் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு கானகம் திரும்பி தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். தமது புவியுலக வாழ்நாளின் இறுதியில் தாம் தியானம் செய்த இடத்திலிருந்த சிவலிங்கத்திலேயே ஒன்றி மறைந்தார்.

ஸ்ரீரிஷ்ய சிருங்கர் வாழ்ந்த பிரதேசமே ரிஷ்ய சிங்ககிரி என அழைக்கப்பட்டது. பின்னர் சிருங்ககிரி எனவும், தற்போது சிருங்கேரி எனவும் மருவித் திகழ்கிறது.

என் கண்கள் உன்னைத் தரிசிப்பதிலும் கைகள் உன்னை பூஜை செய்வதிலும் காதுகள் உன் பிரபாவத்தைக் கேட்பதிலும் வாக்கு உன்னை ஸ்தோத்திரம் செய்வதிலும் தலை உன் பாதத்தை வணங்கியதாகவும் எப்போதும் இருக்க வேண்டும். என் மனது உன் தியானத்தில் ஈடுபடட்டும்