திருமண யோகம் தரும் திருவெம்பாவை திருவிழா

திருமண யோகம் தரும் திருவெம்பாவை திருவிழா
thiruvannamalai-arunachaleswarar-temple-thiruvempavai

              தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

திருவண்ணாமலையில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு 10 நாள் திருவிழா திருவெம்பாவை திருவிழாவாக நடத்தப்படுகிறது.

மார்கழி மாதம் மிகவும் அற்புதமான மாதம் ஆகும். வைணவர்களின் வைகுண்ட ஏகாதசியும், சைவர்களின் ஆருத்ரா தரிசனமும் திருவெம்பாவை முழக்கமும் இந்த மாதத்தின் மகிமையை அதிகரிக்க செய்யும். மார்கழி மாதமானது தட்சணாயனத்தின் கடைசி மாதமாகும். தட்சணாயனம் என்பது ஆடி முதல் மார்கழி வரை உள்ள 6 மாதத்தை குறிக்கும். இது தேவர்களுக்கு இரவு காலமாகும்.

தை முதல் ஆனி மாதம் வரை உள்ள 6 மாத காலத்தை உத்தரணாயனம் காலம் என்பார்கள். உத்தரணாயனம் என்பது தேவர்களுக்கு பகல் காலமாகும். அந்த வகையில் பார்த்தால் மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடமானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். அதன்படி இரவு காலத்தின் கடைசி நேரமான அதிகாலை நேரமாக தேவர்களுக்கு மார்கழி மாதம் அமைகிறது.


அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் அதிகாலை நேரமாகும். இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில்தான் நடராஜரை தரிசிக்க சிவாலயங்களில் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்த புருஷர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு. அந்த அதிகாலையில் இறைவன் கண்விழித்ததும் முதல் ஆராதனையை தேவர்கள் செய்வார்கள்.

அந்த நேரத்தில் நாமும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் இறைவனின் அருளை மிக மிக எளிதாக பெற முடியும். இதை கருத்தில் கொண்டுதான் தமிழ்நாடு முழுவதும் பழமையான ஆலயங்களில் மார்கழி மாதம் மட்டும் அதிகாலையிலேயே பூஜையை நடத்தி விடுவார்கள். 6 கால பூஜை நடக்கும் ஆலயங்களில் கூட இந்த அதிகாலை பூஜை கூடுதலாக நடத்தப்படும். அந்த அளவுக்கு மார்காழி மாத அதிகாலை பூஜைக்கு சிறப்புகள் உண்டு.

திருவண்ணாமலை தலத்தில் பொதுவாக அதிகாலை 5 மணிக்குதான் நடை திறப்பார்கள். ஆனால் மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலை 3 மணிக்கே நடை திறந்து விடுவார்கள். 3.30 மணி முதல் 5.30 மணி வரை கோ பூஜை, பள்ளியறை பூஜை, நித்திய பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த பூஜையில் பங்கேற்றால் மிக சிறந்த பலன்களை பெற முடியும்.

அதுபோல மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை விழாவும் மிகவும் சக்தி வாய்ந்தது. திருவண்ணாமலையில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு 10 நாள் திருவிழா திருவெம்பாவை திருவிழாவாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) 7-வது நாள் திருவெம்பாவை திருவிழா நடைபெறுகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை (23-ந்தேதி) திருவெம்பாவை திருவிழாவின் இறுதி நாள் விழாவான ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். மார்கழி மாதம் பவுர்ணமி தினத்தன்று திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய நாளில் சிவபெருமான் ஆனந்த கூத்தாடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்ற அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த 10 நாள் திருவிழாவுக்கு மாணிக்கவாசக திருவிழா என்ற பெயரும் உண்டு. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி இரண்டையும் திருவண்ணாமலை தலத்தில் இயற்றினார். 20 பாடல்கள் கொண்ட திருவெம்பாவை, 10 பாடல்கள் கொண்ட திருப்பள்ளி எழுச்சியை அவர் இயற்றி அருளிய இடம் இப்போதும் கிரிவலம் செல்லும் பாதையில் அமைந்து உள்ளது. அந்த இடத்தில் மாணிக்க வாசக சுவாமிகளுக்கு சிறு ஆலயம் அமைத்து உள்ளனர்.

இதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிக்கான 10 நாள் உற்சவம் மாணிக்கவாசகர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களில் முதல் 9 நாட்கள் தினமும் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் மாணிக்கவாசகருக்கு சிறப்பு செய்யப்படும். அண்ணாமலையார் ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி அமைந்து உள்ளது. அந்த சன்னதிக்கு நேர் எதிரில் மாணிக்கவாசகர் வீற்றிருக்கிறார். விழா நடக்கும் 9 நாட்களும் நடராஜருக்கும், மாணிக்கவாசக பெருமானுக்கும் சிறந்த முறையில் அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள்.

நடராஜர் சன்னதியை ஒரு சிவாச்சாரியாரும், மாணிக்கவாசகர் இருக்கும் இடத்தில் மற்றொரு சிவாச்சாரியாரும் நின்று ஒருமித்த நேரத்தில் தீபாராதனை செய்வார்கள். பிறகு மாணிக்கவாசகரை நடராஜர் சன்னதி முன்னே எழுந்தருள செய்வார்கள். அப்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும். ஒவ்வொரு திருவெம்பாவை பாடல்களை பாடியதும் நடராஜருக்கும், மாணிக்கவாசகருக்கும் தீபாராதனை காட்டப்படும். இவ்வாறு இருபது திருவெம்பாவை பாடலுக்கும் 20 தடவை தீபாராதனை காட்டுவார்கள். இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதன்பிறகு மாணிக்கவாசகர் வீதிஉலாவுக்கு புறப்பட்டு செல்வார்.

மாணிக்கவாசகர் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலையிலும், மாலையிலும் மாணிக்கவாசகர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 9-வது நாள் இரவு (22-ந்தேதி) நடராஜரும், மாணிக்கவாசகரும் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்கள். மறுநாள் காலை நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேகத்தை நேரில் பார்ப்பது பிறவிப்பிணிகளை நீக்க செய்யும். முக்தி பெறுவதற்கு எளிதான வழிவகைகள் உண்டாகும்.

அந்த அபிஷேக ஆராதனை முடிந்ததும் நடராஜர் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக திருவீதி உலாவுக்கு புறப்பட்டு செல்வார். உலா முடிந்ததும் மீண்டும் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக ஆலயத்துக்கு திரும்புவார்.

பொதுவாக திருவண்ணாமலை தலத்தில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்பட அனைத்து கடவுள்களும் திருவீதி உலாவுக்கு புறப்பட்டு வரும்போது ராஜகோபுரம் வழியாக வர மாட்டார்கள். ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியாகத்தான் திருவீதி உலா வருவார்கள். ஆனால் நடராஜர் அந்த வழியையும் தவிர்த்து விட்டு திருமஞ்சன கோபுர வாசல் வழியாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாதம் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதில் ஒரு சிறப்பு உண்டு. மற்ற மாதங்களில் வழிபாடு செய்தால்தான் பலன் கிடைக்கும். ஆனால் மார்கழி மாதம் வெறுமனே தரிசனம் செய்தாலே போதும் பலன்கள் கிடைத்து விடும் என்பார்கள். எனவேதான் நடராஜருக்கு நடத்தப்படும் ஆருத்ரா தரிசனம் முக்கியத்துவம் பெறுகிறது.

மார்கழி மாதத்தில் ஆலயங்களுக்கு செல்பவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினால் அளவு கடந்த புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். மோட்ச நிலைக்கு செல்ல விரும்புபவர்கள் திருவெம்பாவை பாடல்கள் மூலம் அதை பெற முடியும். மார்கழி மாதம் ஆலயத்தில் மட்டுமின்றி வீட்டிலும் திருவெம்பாவை படித்தால் தடைகள் நீங்கி உடனே திருமண யோகம் கைகூடி வரும் என்பது ஐதீகமாகும்.

மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பஞ்ச பூத வாயு சக்தியான பரிசுத்தமான காற்று பூமி எங்கும் நிரம்பி இருக்கும். அந்த காற்றை சுவாசித்தால் நரம்புகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். உடம்பில் புத்துணர்ச்சி கிடைக்கும். அறிவியல் ரீதியான இந்த பலனை பெறவே மார்கழி மாதம் அதிகாலையில் ஆலயத்துக்கு சென்று திருப்பாவை, திருவெம்பாவை படிக்கும்படி நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தாருகாவனம் என்ற வனத்தில் தவ வலிமைமிக்க முனிவர்கள் இருந்தனர். அவர்களுக்கு சிவபெருமான் மீதான ஈடுபாடு ஒரு காலத்தில் குறைந்தது. எல்லாமே கர்மா அடிப்படையில் நடப்பதாக சொன்னார்கள். இதையடுத்து அவர்களுக்கு சிவபெருமான் மீதான பற்றுதலை ஏற்படுத்த ஈசனே ஒரு திருவிளையாடல் நடத்தினார்.

தாருகாவனத்துக்குள் அவர் பிச்சாடனர் (பிச்சை எடுப்பவர்) வேடம் ஏற்று சென்றார். அவரது அழகில் முனிவர்களின் மனைவிகள் மயங்கினார்கள். பிச்சாடனர் பின்னாலே சென்றனர். இதைக்கண்டு முனிவர்களுக்கு கோபம் வந்தது. அவர்கள் ஹோமம் வளர்த்து அதிலிருந்து புலி, மதயானை, அக்னி, உடுக்கை, மான், முயலகன் போன்றவைகளை வரவழைத்து பிச்சாடனர் மீது ஏவினார்கள். ஆனால் அவை அனைத்தையும் சிவபெருமான் தமது உடமைகளாக மாற்றிக் கொண்டார். மதயானையை கொன்று அதன் தோலை உரித்தி ஆடையாக உடுத்திக்கொண்டார். முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடினார்.

முனிவர்களுக்கு புத்தி புகட்டும் வகையில் தனது சடைகள் எட்டு திசைக்கும் விரிந்து ஆடும் வகையில் அண்டங்கள் எல்லாம் குலுங்க தாண்டவம் ஆடினார்.
அதை கண்ட பிறகே பிச்சாடனர் உருவத்தில் வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்து முனிவர்கள் தங்களது தவறை உணர்ந்தனர். தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து அருள வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினார்கள்.

அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் தன்னுடைய ருத்ர தாண்டவத்தை மாற்றி ஆனந்த தாண்டவமாக ஆடினார். அந்த ஆனந்த தாண்டவம்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன தினத்தன்று நடத்தி காட்டப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கு களி நிவேதனம் செய்வார்கள்.

களி நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வம் பெருகும். மன அமைதி உண்டாகும். சிவன் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.ஆருத்ரா தரிசனத்தன்று விரதம் இருப்பது மிகவும் நல்லது. சிலர் ஆருத்ரா தரிசனத்திற்கான 10 நாட்களும் விரதம் இருப்பதுண்டு.

மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படும் இந்த விரதத்திற்கு மேன்மை தரும் வகையில் திருவெம்பாவை பாடல்கள் அமைந்துள்ளன. சிவனுக்கு தொண்டு புரிவதையே வரமாக சொல்கிறது திருவெம்பாவை. பெண்கள் நோன்பு இருக்க செல்லும் போது தூங்குபவளை எழுப்பும் காட்சியும் திருவெம்பாவையில் உள்ளது.

சிவனின் பெருமையை திருவெம்பாவை பாடலில் உணர முடியும். அண்ணாமலையாரின் திருவடி சிறப்பை திருவெம்பாவையின் கடைசி பாடலில் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

சிவபெருமானின் திருவடிகளே உலகத்திற்கு முதலும், முடிவுமாக உள்ளது என்றும், அவை ஐந்தொழில்களை ஆற்றுகின்றன என்பதையும் திருவெம்பாவை பாடல்கள் சூட்டிகாட்டுகின்றன. எனவே இந்த மார்கழி மாதம் திருவண்ணாமலை தலத்திற்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டு ஆருத்ரா தரிசனம்- திருவெம்பாவை விழாவில் கலந்து கொண்டால் அளவற்ற பலன்களை பெறலாம்.